சென்னை: நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
சட்டசபை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியது.
இதையடுத்து நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூகச் சேவையை கவுரவிக்கும் விதமாக அவரது இறுதி சடங்கின் போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இறுதி ஊர்வலம்
மாலை 4 மணிக்கு விவேக்கின் உடல் இறுதி ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
போலீஸ் மரியாதை
மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.அவருக்கு அவரது இளையமகள் அஸ்வினி, இறுதிச்சடங்குகளை செய்தார்.

























