டெல்லி: பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பில் இருந்து ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவதூறு வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் தடாலடியாகப் பறித்துள்ளது.
இந்த நடவடிக்கை, நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை காலமான 2 ஆண்டுகள் மட்டுமல்ல, தண்டனைக்காலம் முடிந்து 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் தகுதி நீக்க காலம் ஆகும்.
இந்த 8 ஆண்டு காலத்தில் அவர் தேர்தலில் நிற்க முடியாது என்று அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ராகுல் காந்தி சட்ட நிவாரணம் தேடலாம். முதலில் அவர் தனது தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேலமை நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும். அப்பீல் செய்கிறபோது, அங்கு அவருடைய தண்டனையை நிறுத்தி வைப்பதுடன், தீர்ப்புக்கும் தடை விதிக்க வேண்டும். இது நேர்ந்தால் பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்படும் என அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தகுதி நீக்கம் செய்ததை நாடாளுமன்ற செயலகம் நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும், பாஜக அரசு மீண்டும் ராகுல் காந்தி மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளது இந்த அவசரகோல பதவி பறிப்பிலேயே தெரிந்துவிட்டது.
எனவே ராகுலுக்கு நீதிமன்றத்திலஸ் நிவாரணம் கிடைத்தாலும், இதில் இறுதி முடிவு என்பது நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில்தான் உள்ளது.

























