வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், சிலம்பரசன் டிஆர் நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடகத் துறையினரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், “படம் தமிழ்நாட்டைத் தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது. நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்த படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது பெறுவார், அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். இயக்குனர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வெற்றிபடமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ ஆர் ரகுமான்தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம் 2 விரைவில் தயாராகும்,” என்றார்.
கௌதம் மேனன்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது, அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது, அதுபோல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி. ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும், அதற்குள் பல சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றைக் கடந்துதான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இந்தப் படம் பல இடங்களுக்குச் சென்றது, அதற்கு மனமார்ந்த நன்றியைக் கூறிகொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் அவர் கொடுத்தார். நான் ஒரு கதை கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி. சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் பெரும்பங்காற்றினார், அவருடைய மல்லிபூ பாடல் இப்போது அனைவரும் பாராட்டிகொண்டு இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி,” என்றார்.

சிம்பு
படத்தின் நாயகன் சிலம்பரசன் பேசுகையில், “என் படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இதுதான் முதல் முறை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதைதான் செய்வதாக இருந்தது. இந்தக் கதை கேட்டவுடன் செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப் படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன். அதனால் சிலரால் என் உடம்பைக் கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தைக் கேலி செய்யாதீர்கள். நான் பரவாயில்லை. ஆனால் அது அவர்களுக்கு பலருக்கு வலியைத் தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2 ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
நிகழ்ச்சியில் எடிட்டர் ஆன்டனி, ஒளிப்பதிவாளர் சித்தார்த், நடிகர் நீரஜ் மாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

























