கொச்சி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தொடங்கினார். கன்னியாகுமரியிலிருந்து இந்தப் பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். இந்தநிலையில் இன்று 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். கேரள நடைபயணத்தின் போது சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடுவது, தேநீர் கடைகளில் சாமானிய மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது, படகு ஓட்டியது உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறியது. இதனிடையே கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது. கேரளாவில் 18 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கேரளாவில் நடைபயணம் தொடங்கி 10 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

150 நாட்களில் 3750 கிமீ தூரம் இந்த நடைபயணத்தை மேர்கொள்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணம் தொடங்கிய 14 நாட்களில் 250 கிமீ தூரத்தைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

























