பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன.
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ மூலம் சமீபத்தில் பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் அவர் தொடங்கியுள்ளார்.
விக்ரம் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. பா.ரஞ்சித் – விக்ரம் – ஞானவேல் ராஜா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு மைதானம் என தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. இருந்தாலும், இந்த பூஜையிலும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
சீயான் 61 என்ற தற்காலிக தலைப்புடனே படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படத்திற்காக முதன் முறை ஜி.வி.பிரகாஷ்குமாருடன் பா.ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார். சார்பாட்டா பரம்பரை படம் வரை சந்தோஷ் நாராயணனுடன் பணியாற்றினார் பா ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா என்பவரை இசையமைக்க வைத்துள்ளார். அடுத்து ஜி.வி.யுடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.
அட்டகத்தி படத்துக்குப் பிறகு அடுத்த படத்திலேயே பா ரஞ்சித்துடன் ஞானவேல் ராஜா இணையவிருந்தார். முறைப்படி ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி திரைப்படத்தை அவர் இயக்கியதால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவர் படம் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில் பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது விக்ரம் படத்தின் தொடங்கியுள்ளனர்.
சென்னை அடையாறு என்எப்டிசி அரங்கில் இன்று நடைபெற்ற விக்ரம் 61 படத்தின் பூஜையில் நடிகர்கள் சிவகுமார், விக்ரம், கலையரசன், ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

























