ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.
சந்திரமுகி 2 படப்பிடிப்புக்குச் செல்லும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்.

























