சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தம்பி விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை,” என்றார்.
மேலும், மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, ‘போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி’ என்று என்னிடம் கேட்டுவிட்டுத்தான் போனார்,” என்றும் சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருமாவளவன், “மனுஸ்மிருதியில் பெண்களை இழிவாக பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் சொன்னாரே தவிர அவர் பெண்களை இழிவாகப் பேசவில்லை. உண்மையில் திருமாவளவன் பெண்கள் மீதான அக்கறையால் தான் பேசியுள்ளார்,” என்றார்.
பாஜக நடத்தவிருக்கும் வேல் யாத்திரையை குறித்த கேள்விக்கு, “பாஜகவுக்கும் வேலுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இத்தனை ஆண்டுகாலமாக அதை செய்யவில்லை? முருகன் ஒரு தமிழ்க் கடவுள். அவரை ஓட்டுக்காக பாஜக சேர்த்துக் கொள்கிறது. நீங்கள் 3 அடியில் வேலை தூக்கினால் நான் 30 அடியில் தூக்குவேன்,” என்றார் சீமான் காட்டமாக.

























