தனக்கு அதிசயம், அற்புதமாகத் திகழ்வது அவருடனான அந்த சந்திப்புதான் என்கிறார் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார். இப்படத்தை அடுத்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதற்கிடையில் ‘புத்தம் புது காலை’ என்ற குறும்படங்களின் தொகுப்பில் ‘மிராக்கிள்’ என்ற தலைப்பில் ஒரு கதையை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படத் தொகுப்பு அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் எது என்று கேட்கப்பட்டது. இதற்கு கார்த்திக் சுப்புராஜ், “நான் இயக்குநர் ஆனதே பெரிய மிராக்கிள் தான். நான் படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் பேட்ட படத்திற்காக ரஜினி சாரை சந்தித்ததும், அவரை வைத்துப் படம் இயக்கியதுதான் என் வாழ்க்கையில் நடந்த பெரிய மிராக்கிள்,” என்று கூறினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற இந்த குறும்படங்களின் தொகுப்பை இயக்கியுள்ளனர்.

























