சென்னை: தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய் கிழமை கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.ம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், மன்னார் வளைகுடா, தமிழகம், இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்று வீசும் ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

























