சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.
தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
பதவிஏற்பு விழா அரங்கத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலாலுக்கு மு.க ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மேடையில் நிகழ்ச்சிகள் தொடங்கியது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் நான் என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுகொண்ட மு,க ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து நீர்ப்பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவி ஏற்றுகொண்டார். தொடர்ந்து கே.என். நேரு. ஐ பெரிய சாமி, என அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்ற அனைவருமே ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று கூறிப் பதவி ஏற்றனர்.

























