டெல்லி: 7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணைப்படி ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 78 ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 78 ஏ.சி. ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நேற்று அனுமதி அளித்தது. இவற்றில், 52 ரெயில்கள், தூங்கும் வசதி கொண்ட ஏ.சி. ரயில்கள் ஆகும். மீதி 26 ரயில்கள், இருக்கை வசதி கொண்ட ஏ.சி. ரயில்கள் ஆகும்.
இவற்றில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களும் அடங்கும். இந்த ரயில்களை இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ரயில்வே கோட்டங்களின் பொது மேலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தூங்கும் வசதி கொண்ட ஏ.சி. ரயில்களில் சென்னை- நிஜாமுதின் துரந்தோ ரயிலும் அடங்கும். சான்ட்ராகச்சி- சென்னை, சென்னை-மதுரை, சென்னை-நிஜாமுதின் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-சென்னை, சென்னை-கோயமுத்தூர் உள்ளிட்ட 7 வழித்தடங்களில் 16 சதாப்தி ரயில்கள் இயக்கப்படும். சென்னை-பெங்களூரு உள்ளிட்ட 4 வழித்தடங்களில் டபுள் டெக்கர் ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் தனியார் தேஜாஸ் ரயில்கள், வருகிற 17-ந் தேதி முதல் மீண்டும் ஓடத் தொடங்குகின்றன.

























