நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன் பேசும் போது, “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்த்தால் நான் நடிக்க சம்மதித்தேன். படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் என்னிடம் இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா..? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் எனக்கு இப்படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாமே பிடித்திருந்த்து. இப்படத்தில் இயக்குநர் இரஞ்சித் இருக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்து, பேசினால் என்ன தவறு என்று கேட்கிறேன்..? நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. நாம் அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, “காலு மேல காலு போடு ராவணகுலமே ” என்று பாடத் தோன்றுகிறது,” என்றார்.

அசோக்செல்வன் பேசுகையில், “இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெசல், ரொம்பவே பெர்ஷனலும் கூட.. ஏன் என்று கேட்டால் இந்தக் கதையா..? இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா..? அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா..? என்று சொல்லத் தெரியவில்லை. வாய்ப்புத் தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கைக் கொடுக்கமாட்டாரக்ளா.. என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ப்ளு ஸ்டார் நம்பிக்கையை கொடுத்து, ஜெயிக்கிறோம் என்கின்ற உத்வேகத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. ப்ளூ ஸ்டார் திரைப்படம் எனக்கு அத்தனையையும் கொடுத்திருக்கிறது. நான் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மனைவியைக் கொடுத்திருக்கிறது. சிலர் பேசுவதற்கும் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பா. இரஞ்சித் அவர்கள் என்ன பேசுகிறாரோ.. அது போலவே நடப்பவர். அந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை,” என்றார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் பேசியதாவது:
“இயக்குநர் ஜெய் இந்த இடத்தில் இந்த மேடையில் இருப்பது, பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயக்குமார் எந்தளவிற்கு எமோஷ்னலாக இருக்கிறானோ அதே அளவிற்கு நானும் எமோஷ்னலாக இருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர் கணேஷமூர்த்தி சாருக்கு மகிழ்ச்சி. எங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களில் எப்பொழுதும் ஏதாவது பிரச்சனைகள் இருக்கும். ஆனால் சென்சாருக்கு சென்ற படம் ரிவைசிங்\ கமிட்டிக்கு போய் திரும்பி வருவது இது ஒன்றுதான். யுஏ தந்திருக்கிறார்கள்.
எடிட்டர் செல்வா ஒரு கமர்ஸியல் எடிட்டர். அவன் இப்படம் கமர்ஸியலாக வெற்றி பெறும் என்று கூறினான். பார்க்கலாம். இப்படத்தில் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த உழைப்புக்கு ஏற்ற வெகுமதி வாழ்த்துக்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படம் மிகச்சிறப்பான படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜெயக்குமார் எப்படி மியூசிக் வாங்கப் போகிறான் என்று நினைத்தேன். நான்தான் இசை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறிவிடு, அவர் வேறு ஒன்று தருவார் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் ஜெய் மற்றும் கோவிந்த் வசந்தாவிற்குமான அன்பும் பிணைப்பும் புரிதலும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகச்சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. இன்று அவரின் பாடல்கள் ப்ளூ ஸ்டார் படத்தின் முகவரியாக மாறி இருக்கிறது. அந்த உழைப்பிற்கு நன்றி.
நான், இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் தினகர் மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நுழைவுத் தேர்வுக்கான மையத்தில் படிக்கப் போகும்போதுதான் பழக்கம் ஏற்பட்ட்து. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முதலாண்டில் நான் இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் ஜெயக்குமாரும் தினகரும் அனிமேட்டராக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
பின்னர் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றும் பொழுது, அவர்கள் இருவரும் சம்பாதிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னர் நான் கபாலி படம் செய்யும் போது, தினகர் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தான். நான் மிகவும் கோபப்பட்டேன். நீ அனிமேட்டராக வேண்டும் என்றுதானே நினைத்தாய் என்று கேட்டேன். இல்லை நான் இயக்குநராக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான். அதனால் அவனை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன். பின்னர் ஜெயக்குமார் என்னிடம் காலா திரைப்படத்தில் வந்து சேர்ந்து கொண்டான். என் நண்பர்கள் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்த பொழுது நான் அசெளகர்யமாக உணர்ந்தேன். ஏனென்றால் மற்ற உதவி இயக்குநர்களிடம் வேலை வாங்குவது போல் அவர்களிடம் வேலை வாங்க தயக்கமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்காமல் பிற உதவி இயக்குநர்களை எப்படி நடத்துவேனோ அது போலவே அவர்களையும் நடத்தினேன்.
அவர்களும் அதைப் புரிந்து கொண்டனர். ஜெயக்குமார் இயக்கிய டாக்குமெண்ட்ரியைப் பார்ததும் மிரண்டு விட்டேன். அவனை நீ சீக்கிரமே படம் செய் என்று உற்சாகப்படுத்தினேன். ஆனால் அவனிடம் இருந்து நான் வேறு மாதிரியான படைப்பைத்தான் எதிர்பார்த்தேன். அவன் தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு வணிகநீதியான ஒரு படம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் இருந்தது. ப்ருத்வி செய்த கதாபாத்திரம்தான் ஜெயக்குமார் என்பதெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டோம். கல்லூரியில் அவனைப் பார்க்கவே பயமாக இருக்கும். என்ன சொன்னாலும் கோபித்துக் கொள்வான். அவனை சமாதானப்படுத்தவே மூன்று நாட்கள் ஆகும்.
எப்பொழுதும் சுவற்றில் கைகளால் குத்திக் கொண்டு குங்ஃபூ பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பான்.
தினகரும் விரைவில் அவன் எடுத்து வரும் படத்தின் வெளியீட்டு விழாவில் உங்களை சந்திப்பான்.கீர்த்தி பாண்டியன் மிக தைரியமாக மேடையில் பேசி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். இன்று நம் நாடு மிக மோசமான காலகட்ட்த்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. அதைத் தடுப்பதற்கு எவ்வளவு தூரம் திரைப்படக் கலையைக் கொண்டு போராட முடியுமோ, நாமெல்லாம் இணைந்து அதற்காகப் போராடுவோம். படத்தில் நடித்த பிற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். மகிழ்ச்சி.”
படத்தின் இயக்குநர் ஜெய்க்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஆகியோரும் பேசினர்.























