சென்னை: உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த அனைத்துக் கட்சிப்க் கூட்டத்தை புறக்கணித்தது. பாஜகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீதி கட்சி ஆட்சியில் தான் வகுப்புவாரி பிரதிநிதத்துவம் வழங்கப்பட்டது. காலங்காலமாக சாதி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் பின்னர்தான் பள்ளி, கல்லூரிக்குள் நுழைந்தார்கள். கல்வியின் மூலம் வேலைபெற்று பயன் அடைந்தார்கள்.
இன்றைக்கு சமூக நீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுதான் பாஜகவின் திட்டம். இட ஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது என்று கூறி வருபவர்கள் இந்த இடஒதுக்கீட்டை மற்றும் ஏற்கின்றனர். இதில் உள்ள சூட்சமத்தை நான் சொல்லத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாம் எதிர்க்க மாட்டோம்.
ஆனால் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? மாதம் ரூ.62 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? பொருளாதார ரீதியில் வழங்கும் இந்த சலுகை அரசியலமைப்புக்கு எதிரானது,” என்று தெரிவித்தார்.
சீராய்வு மனு
இதனைத் தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர். பின்னர் கூட்டத்தில் முடிவில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் முடிவு செய்யப்பட்டது.

























