சென்னை: தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன.
மதுரை, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, ஏழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நாமக்கல்: ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர்கேட், அத்தனூர் பகுதிகளில் மழை பெய்தது.
மயிலாடுதுறை: சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையிலிருந்து 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது.
கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடர்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

























