டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட கிட்டத்தட்ட 2 மடங்குக்கு மேல் எரிபொருட்களில் விலையை பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் உயர்த்திவிட்டது. ஒவ்வொரு முறை விலையை உயர்த்தும்போதெல்லாம் கூசாமல் பழியை முந்தைய காங்கிரஸ் அரசு மீது போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும்.
வடக்கில் 5 மாநில தேர்தல் நேரத்தில் கிட்டத்தட்ட 137 நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது மோடி அரசு. தேர்தலுக்குப் பின் நிச்சயம் விலை உயரும் என்ற பலரது கணிப்பை உண்மையாக்கும் விதமாக 15 நாட்களுக்கு முன்னர் விலையை உயர்த்தினர். அன்றிலிருந்து கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இடையில் சமையல் எரிவாயு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலைகளை தாறுமாறாக உயர்த்தியது மத்திய அரசு.
கடந்த 15 நாட்களில் 13வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்தது. பெட்ரோல் ஒரு லிட்டர் 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்தது. டீசல் ஒரு லிட்டர் 100.18 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சென்னையில் முதல்முறை பெட்ரோல் விலை ரூ.110ஐ தாண்டியது: டீசல் விலை சதமடித்துள்ளது. ஏற்கனவே மதுரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 111ஐ தொட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை 80 பைசாவும் உயர்த்தப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 104.61க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 95.87க்கு விற்கப்படுகிறது.

























