சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் 3-ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சையில் உள்ள ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”.

























