சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள் என்றும், உண்மைகள் நம் பக்கம் இருப்பதால், அந்த பொய்களை பொடிப்பொடியாக தூக்கி எறிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிரிகள் நமக்கு எதிராக வெற்று வதந்திகளை கிளப்புவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், அவற்றை நொறுக்கும் விதமாக நம்மிடம் குவிந்துள்ள சாதனை திட்டங்களை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தேநீர் கடை, திண்ணை பிரச்சாரம் கட்சிக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

























