சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று இரவு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பருவநிலையே முற்றிலும் மாறியுள்ளது. சென்னை போன்ற வெயில் பிரதேசங்கள் இப்போது குளுகுளு பிரதேசங்களாக மாறியுள்ளன. சில்லென்ற காற்றும், மழையும் மிக ரம்மியமான சூழலை உருவாக்கியுள்ளன.

























