டெல்லி: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார். இந்தியர்களுக்கு இடையேயான உறவை அவர் உடைக்கிறார் என்றால் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைக் கருத்தையே அவர் உடைக்கிறார். இதன் காரணமாகவே நான் அவரை எதிர்க்கிறேன். இந்திய மக்களிடையே ஒரு பிணைப்பு பாலத்தை உருவாக்குவது எனது கடமை, வேலை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.
இந்தியா ஒரு பிராந்தியம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியா என்பது மக்கள் என நாங்கள் கூறுகிறோம். இந்து, முஸ்லீம், சீக்கியர் உள்ளிட்டோர் இடையேயான பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார். ஒவ்வொரு முறையும் வெறுப்புணர்வை பரப்பி இந்தியர்களுக்கு இடையேயான பிணைப்புப் பாலத்தை அவர் உடைக்கும் போதும், அன்பை பரப்பி மீண்டும் பிணைப்பை உருவாக்குவதே எனது பணியாகும்.
இது எனது பணி மட்டும் அல்ல. நமது பணியும் கூட. பலதரப்பட்ட பாரம்பரியங்கள், கருத்துகள், வெவ்வேறு மதங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றை புரிந்து கொள்ளாமல் என்னால் பாலத்தை (பிணைப்பு) கட்டமைக்க முடியாது,” என்றார்.

























