சென்னை: கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும்இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
டீசரைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘சோழா சோழா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலையும் இளங்கோ கிருஷ்ணனே எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அப்யங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
முதல் பாடலைப் போலவே இந்தப் பாடலுக்கும் கலவையான விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
வரும் செப்டம்பர் 6-ம் தேதி படத்தின் முன்னோட்டம் மற்றும் முழுமையான இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
சோழா சோழா பாடல்

























