உச்ச நட்சத்திரத்தின் அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக அவர் வீட்டுக் கதவைத் திறந்து நின்று வாயைத் திறந்தாலே, அடுத்த நாள் வரை விவாதங்கள் தூள் கிளம்பும். ஆனால் ஒரேயடியாக தனது அரசியலுக்கு அவர் முழுக்குப் போடுவதாக மூன்று பக்க அறிக்கை கொடுத்ததை செய்தியாக வெளியிட்டு, பேருக்கு ஓரிரு விவாங்களை நடத்தியதோடு அத்தனை சேனல்களும் அமைதியாகிவிட்டன, அச்சு, இணைய ஊடகங்களில் பெரிதாக எந்தத் துப்பறியும் கட்டுரைகளும் இடம்பெறவில்லை.
அதன் பிறகு உச்ச நட்சத்திரமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ கூட வெளியிடாமல் ஒரேயடியாக மௌனம் சாதிப்பது, உண்மையான அவரது ரசிகர்களை பெரும் குழப்பத்திலும் மனச்சோர்விலும் ஆழ்த்தியுள்ளது.
‘தலைவரின் அரசியல் விலகலுக்கு சர்வ நிச்சயமாக கொரோனா மற்றும் அவரது உடல் நிலை மட்டுமே காரணம் இல்லை. அதையும்விட பெரிதான, அதிர்ச்சிகரமான காரணம் ஒன்று இருக்கக் கூடும். அது என்னவாக இருக்கும்? இந்த மர்மத்துக்கு விடை எப்போது கிடைக்கும்?’ – ரசிகர்களின் ஆதங்கம் தொடர்கிறது.

























