பியாங்யாங்: வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார்.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இதன்பின்னர் கிம் கூடியிருந்த பார்வையாளர்களின் முன் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, “கொரோனா வைரசின் பாதிப்புக்கு ஒருவர் கூட ஆளாகாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் இந்த தொற்றுநோயில் இருந்து நம்முடைய மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது நம்முடைய இயற்கையான பணியாகும். இது நம்முடைய கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
எனினும், இந்த வெற்றியை தொடர்ந்து, மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை காணும்பொழுது, நன்றி கூறுவதற்கு தவிர வேறு வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.
வடகொரிய மக்கள் அவர்களாகவே மிக பெரிய வெற்றியை சாதித்து இருக்கிறார்கள்,” என்றார். வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, பின்னர் பல நாடுகளிலும் மக்களைத் தீவிரமாக பாதித்து வருகிறது. இந்த சூழலில்தான் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என வடகொரியா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

























