இந்த ஆண்டு முழுவதுமே கொரோனாவால் திரைத்துறை முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்குக் கூட பெரிய பட்ஜெட் படங்களைத் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிப் பேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய வசூலை எட்டுவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தத் தயக்கம்.
சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 5 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் மூடி விட்டனர். இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு பதிலாக பொங்கலை குறிவைத்துள்ளன.
நீண்ட மாதங்களாகக் கிடப்பில் உள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்தியில் சுல்தான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. எனவே அந்த படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள காடன் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























