டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மோடி 3-வது முறை யாக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

























