செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.
இந்தப் படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி உலகெங்கும் வெளியானது. அதற்கு அடுத்த நாள்தான் பொன்னியின் செல்வன் வெளியானது.
வெளியான முதல் நாளே ரூ 10 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது நானே வருவேன். பொன்னியின் செல்வன் வெளியான பிறகும் நானே வருவேன் படத்துக்கான ரசிகர்கள் வருகை குறையவில்லை. காரணம் இரு படங்களும் வேறு வேறு ரகம். இரண்டுமே மக்களுக்குப் பிடித்திருந்ததால் இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.
வார விடுமுறை நாட்களுக்குப் பிறகு இன்று திங்கட்கிழமையும் சென்னையில் மட்டுமல்லாமல் புறநகர்ப் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களிலும் நானே வருவேன் படத்துக்கு 80 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “நானே வருவேன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் ஓடிக் கொண்டுள்ளன. அனைத்து இடங்களிலிருந்தும் திருப்தியான வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது,” என்றார்.

























