நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரும் மாஸ் நடிகர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படமொன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அது பெரிய பணி. நேரம் வரும்போது நிச்சயம் செய்வேன்,” என்றார்.
பொதுவாக பெரிய அளவில் வெற்றிப் பெற்ற தனது படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டதில்லை. 2.0 மட்டுமே விதிவிலக்கு. பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்க முயன்றபோது, நடிக்க மறுத்துவிட்டவர் ரஜினி. ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

























