நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி நிவேகாஸ், விஜி சந்திரசேகர்
இசை – தரண்குமார்
தயாரிப்பு – அபி அன்ட் அபி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எஸ்ஆர் பிரபாகரன்
வெளியீடு: ஜீ5
சுந்தரபாண்டியன் பட புகழ் எஸ்ஆர் பிரபாகரன் முதல் முறையாகக இயக்கியிருக்கும் இணையத் தொடர் செங்களம். சற்று மெதுவாக ஆரம்பித்து பரபர அரசியல் த்ரில்லராக முடிகிறது இந்தத் தொடர்.
கதை இதுதான். விருதுநகர் நகராட்சியின் தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது சிவஞானம் மற்றும் அவரது குடும்பம். தாத்தா, அப்பா, மகன் என அவர்களது மொத்த குடும்பமே பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்கின்றனர்.

அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு கூட, நகராட்சி மன்றத் தலைவருக்கு இருக்கிறது. இதனால், எப்படியாவது இந்த அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அப்பா சிவஞானத்தை அடுத்து, அவரது மூத்த மகன் ராஜமாணிக்கம் (பவன்) நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கும் சூர்யகலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது. தேனிலவுக்கு கொடைக்கானல் செல்லும்போது ஏற்படும் விபத்தில் ராஜமாணிக்கம் உயிரிழக்கிறார்.
அடுத்த நகராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராஜமாணிக்கத்தின் மனைவியான சூர்யகலாவை நிற்க வைத்தால் அனுதாப வாக்குகளில் வெற்றியை அள்ளலாம் எனத் திட்டமிடுகிறார் சிவஞானம். இது அவரது மற்ற இரு மகன்களுக்கும் பிடிக்காமல் போகிறது. ஆனால் சூர்யகலாவுக்கு மெல்ல மெல்ல அந்தப் பதவி மீது மோகம் வருகிறது. இப்போது சிவஞானம் சூர்யகலாவை நிற்க வைக்கத் தயங்குகிறார். யாரை அவர் தேர்வு செய்கிறார் என்பது ஒருபக்கம்.
இன்னொரு பக்கம், 3 கொலைகளைச் செய்துவிட்டு காட்டில் தலைமறைவாக இருக்கும் கலையரசன் மற்றும் அவரது சகோதரர்கள், மேலும் இரு கொலைகளை போலீசுக்கு சவால் விட்டே செய்கிறார்கள். இந்தக் கொலைகளின் பின்னணி மற்றும் சூர்யகலாவின் அரசியலோடு உள்ள தொடர்பு என்ன என்பதையெல்லாம் விறுவிறுவென விவரிக்கிறது மீதி.
தமிழ் இணையத் தொடர்களில் முதல் அரசியல் த்ரில்லர் செங்களம்தான் எனலாம். தமிழ்நாட்டு அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் இரு கழங்களின் அரசியல் வரலாற்றிலிருந்து பல நிகழ்வுகளை, விருதுநகர் மாவட்ட அரசியலாக மாற்றிக் காட்சிப்படுத்தி இருக்கிறார் எஸ்ஆர் பிரபாகரன். கதையோடு பார்வையாளர்களை ஒன்ற வைக்க இது பெரிதும் பயன்பட்டுள்ளது.
ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரை ‘அன்று’ ‘இன்று’ என முன்னும் பின்னுமான நிகழ்வுகளை குழப்பமின்றி காட்சிகளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சில அத்தியாயங்கள் மெதுவாகப் போனாலும், இறுதி அத்தியாங்களில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. சூர்யகலாவின் மரணம், நாச்சியாரின் எழுச்சியை ரொம்பவே கவனமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கலையரசன், வாணி போஜன், ஷாலி, விஜி, வேல ராமமூர்த்தி, பவன் என அனைவருக்குமே சமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவர்களும் தங்கள் வேடங்களுக்கு நியாயம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
மதிப்பீடு: 3.0/5.0

























