கொரோனா 2வது அலையால் தமிழக மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமே முடங்கிப் போயுள்ளது. அரசு நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது.
திரைப்படத் துறை முற்றாக முடங்கி உள்ளதால் பெப்சி நிதி திரட்டி சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா கொரோனாவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் 200 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார்.
இந்தத் தொகையை ரசிகர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தி உள்ளார். கொரோனா கால கஷ்டத்தில் சூர்யா அனுப்பி உள்ள தொகை பெரிய உதவியாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின் போதும் இதேபோல பல கோடி ரூபாய் மதிப்பில் உதவிகள் செய்தார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம். நாயகியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் சத்யராஜ், சரண்யா, இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 35 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

























