வலிமை ரிலீஸ் தேதி அப்டேட்!
அஜித்குமார் நடிக்க, வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனாலும் தேதியை வெளியிடவில்லை.
இந்த நிலையில் வலிமை படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்றும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் இன்னும் சில மணி நேரங்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த சிலமணி நேரங்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்ததாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை மற்றும் தென் தமிழ்நாட்டு கடல்பகுதிக்கு நகரக்கூடும். இது புயலாக மாற வாயப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விட்டுவிட்டு மழை
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியரும் தூக்கிட்டு தற்கொலை
கரூரில் பாலியல் தொல்லையால், தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை விவகாரத்தில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர் இவர்தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
700 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு
பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

























