உவால்டே: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பள்ளியின் ஆசிரியரும் ஒருவர்.
சான் அன்டோனியோ நகருக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் 18 வயதுடைய ஒரு நபர் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடத்திய நபர் பக்கத்தில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு படித்து வந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர், குறிப்பாக 19 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

























