கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
விவசாய உற்பத்தி வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை, பண மதிப்பு வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலை என பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதால் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர், அதிபர் வீடுகளை மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
இந்நிலையில், நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக்கொள்வதாக அறிவித்து, உரிய கடிதமும் கொடுத்துவிட்டன.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன. கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 43-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டனர்.
ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசின் பலம் 102 உறுப்பினர்கள் ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அதேவேளை, அரசு பெரும்பான்மையை இழந்தபோதிலும் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கே அதிக அதிகாரம் உள்ளதால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேலும் கால தாமதம் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலேயே மகிந்த ராஜபக்சே அரசு கவிழும்.
ஆனால் இலங்கை மக்கள் ராஜபக்சே குடும்பமே அரச அமைப்பிலிருந்து முற்றாக வெளியேற வேண்டும் என்பதை முழக்கமாக வைத்து போராடி வருகின்றனர். குறிப்பாக அதிபர் பதவியில் இருக்கும் கோத்தபாயவுக்கு எதிராக #GoBackGotta என்ற வாசகத்துடன் சாலைகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

























