டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தக் கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் பேசும் போது, “ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5ஜி நெட்வொர்காக இருக்கும். கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான ஒரு 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ 2000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது.
உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் 1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது,” என கூறினார்.
5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

























