சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
சட்டசபையில் மசோதா குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உயர் கல்வியில் மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது.
துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும், ஆளுநர் – மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும்.
துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசுதான் துணைவேந்தரை நியமிக்கிறது; இதே நிலைதான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது,” என்றார்.
இந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.

























