சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பலங்க முறை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற அரிசி ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் விஜயராஜ். எம்ஜிஆர் படங்களின் தாக்கத்தால் சினிமா ஆர்வம் அதிகரித்தது. 1970களின் இறுதியில் இரு நிகழ்ச்சிகளுக்காக மதுரை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாதுகாவலராக இவர் பணியாற்றினார். அந்த நிகழ்வு மற்றும் மதுரையைச் சேர்ந்த பட விநியோகஸ்தர் மன்சூரின் தொடர்பு போன்றவற்றால் அவருக்கு இயல்பாகவே சினிமா ஆர்வம் அதிகரித்தது. திரைப்பட நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ்.
சென்னை வந்தவரை தமிழ் சினிமா உடனே அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை. எங்கு சென்றாலும் விஜயகாந்த் கறுப்பு என அவரது நிறத்தைக் காரணம் காட்டியே பலர் நிராகரித்தனர்.
ஆனாலும் தொடர் முயற்சியால், 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
எம். ஏ. காஜாவிற்கு விஜயராஜ் என்ற பெயரில் விருப்பமில்லை; அந்தக் காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் புகழின் உச்சத்திலிருந்ததால் அவரது பெயரிலிருந்த காந்த் என்பதை எடுத்து, விஜயராஜ் என்ற பெயரில் இணைத்து விஜயகாந்த் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
பின்னர் எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம்தான் விஜயகாந்துக்கு முதல் திருப்புமுனை. பின்னர் ஏராளமான படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி கிடைத்தது, அதே எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் அவர் நடித்த சாட்சி படத்தில்தான். அதன் பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்த விஜயகாந்துக்கு பெரும் புகழைத் தந்தது ஆர் சுந்தரராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம். அதன்பிறகு ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த முன்னணி நாயகனாகத் திகழ்ந்தார்.
2004ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களின் ஆதரவுடன் அவர் தேமுதிக எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 3006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு அடுத்து வந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிர வைத்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்த், 29 தொகுதிகளில் வென்று, எதிர்க்கட்சித் தலைவரானார்.
ஆனால் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிட்டது. தொடர் தோல்விகள் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
2021-க்குப் பிறகு விஜயகாந்தின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சுயநினைவை இழக்கத் தொடங்கினார். 2023-ம் ஆண்டில் பலமுறை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வந்தார். சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் முழுமையாக நினைவை இழந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 27-ம் தேதி அவருக்கு சுவாசப் பிரச்சினை மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிரிந்தது.

தலைவர்கள் இரங்கல்
விஜயகாந்த் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். மோடி தவிர மற்ற தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

























